அவுஸ்திரேலியாவில் இந்துக் கோவில்களை குறி வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் மேலும் ஓர் இந்துக் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி அவமதிப்பு செய்துள்ளனர். பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவிலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கோவில் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியா வந்தபோது, அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்தார். அப்போது, அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பேசினார். இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.