என்.எம். அமீன்
2016ஆம் ஆண்டு அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்திய போது இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு மாவனல்லைப் பிரதேசத்தில் பல பாடசாலைகள் போட்டியிட்டன. தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரது சிபாரிசிலே பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தமது கிராமங்களிலுள்ள பாடசாலையை இத் திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு நிலவிய பலத்த போட்டிக்கு மத்தியிலே நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாசிம் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தை இத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு சிபாரிசு செய்தார். இதன் காரணமாக இப்பாடசாலை அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு கோடி ரூபாவைச் செலவு செய்யவுள்ளது. இதில் 3 கோடி ரூபாய்ச் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை அமைச்சர் வியாழக்கிழமை (03) திறந்து வைத்தார்.
1947 பெப்ரவரி 03ஆம் திகதி ஓலைக் கட்டடம் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட தல்கஸ்பிட்டிய வித்தியாலயம் 72 வருடங்களுக்குப்பின் நவீன வசதிகளுடனான ஒரு கட்டடத்தைப் பெற்றுள்ளது.
அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவில் திப்பிட்டிய ஹெம்மாதகம வீதியில் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ள தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இன்றைய நிகழ்வினைக் குறிப்பிடலாம்.
மர்ஹும் கதீப் கொழும்பு உடயார் அப்துர் ரஸ்ஸாக்கின் சிந்தனையில் உதித்து உருவானதே தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயமாகும். மர்ஹும்களான மௌலவி ஏ.ஆர். செய்னுல் ஆப்தீன், எம்.எம். ஜெலால்தீன், எம்.எல்.எம். ஹனீபா, ஓ.எல்.எம். ஹனீபா போன்றவர்கள் ஆரம்பத்தில் அளித்த பங்களிப்பு நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டும்.
தல்கஸ்பிட்டிய வித்தியாலயத்துக்கான காணியை மர்ஹும்களான யூஸுப் (கொவிராஜா) அஹமட் லெப்பை, கொழும்பு உடயார், அப்துல் கரீம் ஆகியோர் வழங்கினர். தற்போது பாடசாலை அமைந்துள்ள காணியை மர்ஹும் ஏ.ஆர்.எம். ரசீத், மர்ஹும் கே.எம். ஜலால்தீன் ஆகியோர் வழங்கினர். இந்தப் பெருந்தகைகளது பெருந்தன்மை காரணமாகவே இன்று கேகாலை மாவட்டத்திலே ஒரு சிறந்த பாடசாலையாக இந்த வித்தியாலயம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஓலைக்கட்டிடத்தில் ஆரம்பமான இந்தப் பாடசாலைக்கான முதல் கட்டடம் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எச். ரத்வத்தையின் அனுசரணையுடன் கட்டப்பட்டது. நீண்ட காலமாக இக்கட்டடத்தில் இயங்கிய பாடசாலையின் சிரேஷ்ட பிரிவு புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட பின் பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அதன் உச்ச கட்டமாகவே நாளை திறக்கப்படும் கட்டடத்தைக் குறிப்பிடலாம். கல்வி அமைச்சின் அயல் பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் இப்பாடசாலையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிமின் வழிகாட்டல் இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கேகாலை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பீ.ஆர். ரத்நாயக்க, சீ.ஆர். பெலகம்மன, சந்திரா ரணதுங்க, யூ.எல்.எம் பாரூக், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்களாக இருந்த ஜயதிலக பொடிநிலமே, மோகான் எல்லாவெல, அசோக ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன போன்றவர்கள் இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக வேறுபாடின்றி பெற்றுக் கொள்வதில் தல்கஸ்பிட்டிய கிராம மக்கள் சமர்த்தியமாக இருந்து வந்துள்ளனர். அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு தமது பாடசாலையை உள்வாங்குவதற்கு பலத்த போட்டி நிலவிய போது அமைச்சர் கபீர் ஹாசிம் மூலம் இப்பாடசாலையை உள்வாங்கியது இக்கிராமத்தின் மீது அமைச்சர் காட்டிய விசேட அக்கறையாகும். ஒரு காலத்தில் பாதை வசதி கூட இல்லாதிருந்த இக்கிராமம், இன்று முன்னேற்றம் கண்ட ஒரு கிராமமாக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை கல்வி வலயத்தில் கல்வி மற்றும் புறச் செயற்பாடுகளில் சிறந்த இடத்தை வகிக்கும் இப்பாடசாலையில் பயின்ற ஐம்பதுக்கு மேற்பட்டோர் பட்டதாரிகளாக வெளியேறியிருக்கின்றனர்.
இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு எமது கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து தொழில் புரியும் சகோதரர்கள் அளிக்கும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக கட்டாரில் இயங்கும் கட்டார் தல்கஸ்பிட்டிய நலன்புரிச் சங்கம் (தக்வா) மற்றும் குவைத்தில் இயங்கும் அமானா சங்கம் என்பன கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்றிட்டங்களுக்கு உதவி வருகின்றன. இது தவிர பாடசாலைக்கான விளையாட்டு மைதானத்தைக் கொள்வனவு செய்வதற்கு பெற்றோர் பழைய மாணவர்கள், உள்ளூர், வெளியூர் நலன்விரும்பிகள் வழங்கிய ஒத்துழைப்பு ஈன்று குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையின் இன்றைய வளர்ச்சியும், கடந்த காலத்தில் பணி புரிந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிராமசபை உறுப்பினர் மர்ஹும் ஏ.சீ.எம். சமீன் ஆகியோர் வழங்கிய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
மாகாணசபை உறுப்பினராக இருந்த தாஹிர் மௌலவி, எஸ்.எல். நௌபர் இவ்வித்தியாலய வளர்ச்சிக்கு உதவிய பெயர் குறிப்பிடக்கூடிய சிலராவர்.
மாவனல்லைப் பிரதேசத்தில் வசதிகள் குறைந்த ஒரு கிராமமாக சீரான போக்குவரத்து வசதியற்ற ஒரு கிராமமாக இருந்த காலத்தில் தல்கஸ்பிட்டிய மக்கள் கல்வி வாய்ப்புகளை இழந்தனர். உயர் கல்வி பெறத் தகுதி பெற்ற பலர் இடையிலே கல்வியை நிறுத்தியதால் அநேகருக்கு உயர்கல்வி வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த இழப்பினை ஈடுசெய்யும் உயரிய நோக்கிலே இக்கிராமத்தவர்கள் பாடசாலையை உயர் இடத்துக்கு கொண்டு வருவதற்காக அரசியல் பேதங்களை மறந்து ஓரணியில் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போதைய பாடசாலை அதிபரான எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் ஆசிரியர் குழாம் செயற்றிறமைமிகு பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றின் பங்களிப்பு அரநாயக்க பிரதேசசபை உறுப்பினர் றிபாய் சுபியானின் அர்ப்பணித்த செயற்பாடு போன்றன இந்த வித்தியாலயம் பலராலும் பாராட்டிப் பேசப்படும் ஒரு பாடசாலையாக மாறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இப்பாடசாலையில் நான் ஏழாம் வகுப்புவரை படித்தேன். எனது பாடசாலை இலக்கம் 333. எனது வளர்ச்சிக்கு அடிப்படையை இட்ட இந்த பாடசாலை இன்று ஓர் உயர் நிலைக்கு வந்திருப்பதனையிட்டு, அதன் பழைய மாணவர் என்ற வகையில் பெருமைப்படுகிறேன்.
ஹெம்மாதகமைக்கும் திப்பிட்டியவுக்கும் இடையில் அமைந்துள்ள இப்பாடசாலையை வெளி மாணவர்களும் வந்து படிக்கக் கூடிய வகையில் மேம்படுத்துவது காலத்தின் தேவையாகும். அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வுகூடம், ஈ நூலகம் போன்றன அதற்கு உதவியாக அமையும்.