-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கல்முனை பிரதான நகரத்தை அண்டிய பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி பயணித்தவர்களுக்கு விசேட அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வழிகாட்டலுக்கு அமைய கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து வீதிவீதியாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றைய தினம் (22) மருதமுனை பிரதான வீதியில் 100 நபர்களுக்கு எடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது 10 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இன்றைய தினம் (23)கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள சந்தைத் தொகுதியை அண்மித்த பிரதான வீதி ஊடாக அனுமதிப்பத்திரம் இன்றி பயணம் செய்தவர்களில் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போது 06 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டன.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்திற்குள் (22) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 105 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.