எம்.ஜெ.மின்ஹாஜ்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'சௌபாக்கியா' தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தின் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் பிரிவின் ஊடாக அம்பாறை மாவட்டம் துறைவந்தியமேடு கிராமத்தில் நிலக்கடலை பயிர்ச்செய்கையின் அறுவடை வயல் விழா மற்றும் சிறந்த விவசாய நடைமுறை அலகின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பண்ணைக்குரிய உபகரணங்களை இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு என்பன துறைவந்தியமேடு விவசாயக் கிராமத்தில் (11) நடைபெற்றது.
துறைவந்தியமேடு விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி தியாகராசா செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார், விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.எம்.ஜெமீல், தொழில்நுட்ப உதவியாளர் எல்.தீபாளினி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் விவசாயிகளின் பங்களிப்பு, மற்றும் சிறுபோகத்தில் செய்கை பண்ணக்கூடிய மிளகாய், சோயா, பாசிப்பயறு, குரக்கன், நிலக்கடலை, சோளம், உழுந்து போன்ற பயிரினங்களை உற்பத்தி செய்வதன் அவசியம் பற்றியும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.