பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-09-27 06:56:34

சன்மார்க்க வளர்ச்சி, சமூக சீர்திருத்தங்களுக்காக கரிசனையுடன் பங்காற்றிய ஹுஸைனுதீன் மெளலவியின் மறைவு பேரிழப்பாகும்; அம்பாறை மாவட்ட உலமா சபை அனுதாபம்!

(அஸ்லம் எஸ் மௌலானா)

சன்மார்க்க வளர்ச்சிக்கும் சமூக சீர்திருத்தங்களுக்கும் மிகவும் கரிசனையுடன் பங்காற்றி வந்த கிழக்கிலங்கையின் மூத்த உலமா

எம்.ஐ. ஹுஸைனுதீன் மெளலவியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட உலமா சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் முன்னாள் பொருளாளரும் மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான மெளலவி எம்.ஐ. ஹுஸைனுதீன் செவ்வாய்க்கிழமை (26) இரவு காலமானார்.

அன்னாரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அம்பாறை மாவட்ட உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல்.நாசிர் கனி மெளலவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

இஸ்லாமிய சன்மார்கத்தில் ஆழ்ந்த அறிவும் தெளிவும் கொண்டிருந்த

ஹுஸைனுதீன் மெளலவி மிகச்சிறந்த மார்க்கப் பிரச்சாரகராகத் திகழ்ந்தார். தனது ஆளுமையான குரல் வளத்தையும் அறிவையும் கொண்டு, குத்பாப் பிரசங்கங்கள் மற்றும் மார்க்க சொற்பொழிவுகள் மூலம் சமூக சீர்திருத்தங்களையே அதிகம் வலியுறுத்தி வந்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் பொருளாளராக பணியாற்றிய அன்னார் சபையின் செயற்பாடுகளில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் பங்காற்றி வந்துள்ளார். அவ்வாறே மருதமுனை பிரதேசத்திற்கான ஜம்மியதுல் உலமா கிளைக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, அதனை மிகவும் சிறப்பாக வழிநடாத்தியிருக்கிறார்.

அத்துடன் மருதமுனைப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் ஒன்றிணைத்து சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதில் அன்னார் முன்னின்று உழைத்ததுடன் அதன் தலைவராகவும் உன்னத பணியாற்றியிருந்தார். இந்த அமைப்பானது இன்றும் ஊரின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றி வருவதை அறிவோம்.

மருதமுனையில் சகாத் நிதியத்தை ஸ்தாபிப்பதிலும் பெரும்பங்காற்றிய ஹுஸைனுதீன் மெளலவி, அதன் தலைமைத்துவத்தை அமானிதமாக சுமந்து மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறுபட்ட பொது நிறுவனங்கள் ஊடாக உரினதும் மக்களினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அன்னார் தன்னை அர்ப்பணித்து, பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், ஹஜ் கடமைக்காக மக்கா செல்கின்ற யாத்திரிகர்களின் நலன் கருதி நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, நீண்ட காலமாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்களை  மக்காவுக்கு அழைத்துச் சென்று, ஹஜ் கடமையை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றும் வகையில் சிறந்த வழிகாட்டியாக பணியாற்றியிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து, சன்மார்க்கப் பணிகளையும் பொதுச் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts