உள்நாடு | கல்வி | 2023-09-04 20:19:12

கல்முனை மாவட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடங்கியது; கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலாவுக்கு கௌரவம் 

-நூருல் ஹுதா உமர்-

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி கல்முனை கல்வி வலய கல்முனை கர்மேல் பத்திமா கல்லூரியில் இன்று கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.

திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய நான்கு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த  மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றினர். மாவட்ட மட்ட போட்டிகளின் தொடக்க நிகழ்வை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபக ரீதியாக தொடங்கி வைத்தார். இங்கு அதிதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் ஆங்கில கல்வியின் முன்னேற்றம், எதிர்கால ஆங்கிலத்தின் தேவைகள், ஆங்கில கல்வியின் முன்னேற்றம், கிழக்கு மாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

எதிர்வரும் செப்டம்பர் 30, 2023 அன்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு அவருக்கு கல்முனை கல்வி மாவட்டம் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு மரியாதையும் வழங்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும், பட்டாடைகளும் போத்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் உட்பட கல்வி பணிப்பாளர்கள் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி, உதவி கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts