திணைக்களங்களில் நடத்தப்படும் இப்தார் நிகழ்வுகள் ஊடாக ஒரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அம்சங்களை இன்னொரு இனம் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. இது அப் பிரதேச மக்கள் புரிந்துணர்வோடும் இன நல்லுறவோடும் வாழ்வதற்கு வழிவகுக்கும் என கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம். எஸ். சஹூதுல் நஜீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் கல்முனை அலுவலகம் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (19) கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வலயக் கல்வி பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு உரையாற்றுகையில்,
நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இப்தார் நிகழ்வில் எனது நண்பர்களுக்கு பேரீத்தம் பழத்தை கொடுத்த போது, நீ எங்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்ற பார்க்கிறாய் என கூறி தேவையில்லை என்பார்கள். இங்கு இஸ்லாத்தைப் பற்றிய பிழையான எண்ணக்கரு சகோதர சமூகத்தினருக்கு பரப்பப்பட்டிருக்கிறது. அரச அலுவலகங்களில் தமிழ், கிறிஸ்தவ, முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களை ஒன்றிணைத்து இப்தார் நிகழ்வுகளை நடத்தும் போது அங்கு நோன்பு பற்றியும் இஸ்லாம் பற்றி அடிப்படை விடயங்களும் பேசப்படுவதால் இஸ்லாம் மதத்தின் உட கலாச்சார பண்பாடுகளை ஏனைய சமூகத்தவர்கள் அறியக்கூடியதாக உள்ளது அதேபோன்று தமிழ் சகோதரர்களுடைய சரஸ்வதி பூசை போன்ற ஏனைய விழாக்களை நடத்தும் போதும் முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் மக்களுடைய பண்பாட்டு கலாசார . பாரம்பரியங்களை அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ஒருவரை ஒருவர் சமய ரீதியாக, கலாச்சார ரீதியாக பண்பாட்டு ரீதியாக அறிந்து கொண்டு புரிந்துணர்வோடு பழகிக் கொள்ளுவது அப்பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு வழிகாட்டும். நோன்பு என்பது அடுத்த மக்களுடைய பசியை உணர்த்தும் ஒரு வணக்க வழிபாடு ஆகும். என்று தெரிவித்தார்.
இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவினை மெளலவி அஷ்ஷெய்க் என்.ஜி.அப்துல் கமால் (இஸ்லாஹி) நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மாகாண சிரேஷ்ட உள்ளக கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லா, கல்முனை அலுவலக உள்ளக கணக்காய்வாளர் வி.வேல்ராஜசிங்கம், அலுவலகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஜி முபாரக் உட்பட அலுவத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.