அண்மைய பஸ் கட்டண திருத்தமானது 90% பஸ்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தாண்டு காலத்தில் 100 % பஸ்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கட்டண திருத்தங்கள் அமுல்படுத்தப்படாத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலை குறைக்கப்பட்டவுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. அனைத்து பஸ் உரிமையாளர்களும் புதிய பஸ் கட்டண திருத்த தாளை பயணிகளுக்கு தெளிவாகக் காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 24 மணி நேரத்தில் புதிய திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.ஆனால், பல வழித்தடங்களில் திருத்தப்பட்ட பஸ் கட்டணம் அமல்படுத்தப்படவில்லை,” என்றார்.
திருத்தப்பட்ட பஸ் கட்டணத்தை அமுல்படுத்தாத பஸ்களுக்கு நடமாடும் ஆய்வாளர்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியமித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை (3) புதிய கட்டணத்தை நடைமுறைப்படுத்தாத பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மிராண்டா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரே சம்பவம் குறித்து பலமுறை புகார் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் மேல் மாகாணத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.