(எம். எச். எம். அன்வர்)
காத்தான்குடி பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபை முன்னெடுத்து வரும் பாடசாலை மாணவர்களுக்கான கையெழுத்து பிரதி சஞ்சிகை தயாரித்தல் தொடர்பான முதலாவது செயலமர்வு 2023.03.20 ஆந் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் மட்/மம/மெத்தைப்பள்ளி வித்தியாலயம், மட்/மம/மீராபாலிகா தேசிய பாடசாலை, மட்/ மம /ஹிலுறியா வித்தியாலயம், மட்/ மம /அந்நசார் மகா வித்தியாலயம், மட்/ மம /மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலை, மட் /மம /மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) , மட்/ மம /அல் அமீன் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 125 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் முன்னாள் வலய கல்வி பணிப்பாளர் திரு.எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் திரு.ஏ.எல்.எம்.சித்திக், ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வானது ஒவ்வொரு பாடசாலைகளிலும் கையெழுத்து சஞ்சிகை உருவாக்க செயற்பாட்டை ஊக்கப்படுத்தல், மாணவர்களின் பன்மைத்துவ ஆளுமைகளை வெளிப்படுத்தல், சிறந்த கலைப்படைப்பை
" ஸம் ஸம்" மலரில் பிரசுரிக்க ஏற்பாடுகள் செய்தல், மாணவர்களை முற்றுமுழுதாக கலை ஆர்வலராக வளர்ப்பதன் மூலம் சிறந்த பல் ஆளுமையாளர்களாக உருவாக்கல்
போன்றவைகளை சிறப்பாக வளவாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
பிரதேச செயலாளர் தனதுரையில், "கலை இலக்கிய செயற்பாடுகளில் சிறுவர்களை உள்வாங்குவதற்கு சிறந்த தளமாக எழுத்து பிரதி உருவாக்கம் அமையும் என்பதுடன் தற்காலங் களில் பிள்ளைகளை கலை இலக்கிய துறைகளில் நாட்டத்தினை ஏற்படுத்தி பிறழ்வான நடத்தைகளிலும் , வேறு தீய விடயங்களுக்கு அடிமையாவதிலும் இருந்து இவை பாதுகாப்பதற்கான சிறந்த உபாயமாக அமையும்" என பிரதேச செயலாளர் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபை செயலாளர் திருமதி. எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் , உறுப்பினர் ஏ.எல்.எம்.சித்திக் சேர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் திரு.எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.