![]() |
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அரபு கவுன்சில் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
பலஸ்தீனம், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் தர் சைட், எகிப்தியத் தூதுவர் மகேத் மொஹில்டின் நஃபீ மொஸ்லே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்-அமெரி ஆகியோர் கண்டியில் உள்ள அஸ்கிரிய பீடாதிபதியை நேற்று சந்தித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எந்தவித மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் இன்றி அரபு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தூதுவர்கள் பிரதம தேரரிடம் உறுதியளித்துள்ளனர்.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் தர் சைட், அரபுக் கவுன்சில் மேலும் 22 முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்றும் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க அரபு கவுன்சில் நாடுகள் தயாராக இருப்பதாகவும், தகுதியானவர்களை அத்தகைய வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் நாடு பயனடையலாம் என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உதவ முயற்சிப்பதாகவும், எந்தவித நிபந்தனையுமின்றி அதற்கு ஆதரவளிக்க அரபு கவுன்சில் தயாராக இருப்பதாகவும் எகிப்திய தூதுவர் மகேட் மொஹில்டின் நஃபீ மோஸ்லே தெரிவித்துள்ளார்.