(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை ஸ்ரீ சுபத்திராம விகாரை வளாகத்தில் புதிய தாதுகோபுரம் அமைப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் தலைமையில் விகாரை வளாகத்தில் (29) நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டப்ளியு.டீ.வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு தாது கோபுரத்துக்கான அடிக்கல்லை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கல்முனை பிரதேசம் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என பல்லின மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். வேவ்வேறு சமய, சமூக, பண்பாட்டுக் கலாசார விழுமியங்கள் காணப்பட்டாலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு வாழ்ந்து அடுத்த சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் அதற்கு எனது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்சன சிறிசேன, கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் இசட்.ஏ.எச்.எம்.நௌசாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.