(சியாத். எம். இஸ்மாயில் )
அட்டாளைச்சேனை அஷ்ரஃப் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டாளைச்சேனை அக்/அல்-அர்ஹம் வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக அண்மையில் இடம்பெற்றது.
12 அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை புBளு இலவன் அணியும், காரைதீவு ரைடர்ஸ் அணியும் தெரிவாகின.
5:3 எனும் அடிப்படையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காரைதீவு ரைடர்ஸ் அணி 25:21, 25:23, 25:18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இறுதிப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு ரைடர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும், ரூபா 15,000 பணப் பரிசும் வழங்கப்பட்டதுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை புBளு இலவன் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் ரூபா.5000 பணப் பரிசும் வழங்கப்பட்டது.
அஷ்ரஃப் இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.எம்.சர்பான் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பெஸ்ட் கெயா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.முனாஸ்டீன் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக அக்/அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ், அஷ்ரஃப் விளையாட்டு கழகத்தின் தலைவரும், அக்கரைப்பற்று உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளருமான எஸ்.எம்.நிஸாம் (ஜே.பி), சம்மாந்துறை ஜின்னா செலூலர் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஜே.எம்.இர்பான், அட்டாளைச்சேனை ஜ.பி.எல் சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவரும், அஷ்ரஃப் விளையாட்டு கழகத்தின் உபதலைவருமாகிய எஸ்.எச்.சபீக், அட்டாளைச்சேனை ஐ.பி.எல் சமூக சேவைகள் ஒன்றியத்தின் செயலாளர் ஏ.றிபாஸ், மற்றும் ESTEX என்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை ஐ.பி.எல் சமூக சேவைகள் ஒன்றியத்தின் சமூக சேவைகள் பிரிவின் பொறுப்பாளருமாகிய எம்.ஐ.எம்.சிஹான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியின் சிறந்த வீரருக்கான விருது காரைதீவு ரைடர்ஸ் அணியின் தனூஜனுக்கு வழங்கப்பட்டது.