உள்நாடு | மருத்துவம் | 2022-01-13 13:54:07

தீகவாபி புதிய வைத்தியசாலை ஆளுநரால் திறந்து வைப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்குட்பட்ட தீகவாபி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையின் திறப்பு விழா இன்று புதன்கிழமை (12) கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.தொளபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 18 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையில் அனைத்து நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தருவதற்கும் காலக்கிரமத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் அனுராதா யஹம்பத் இதன்போது உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் ஆளுநருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், வைத்திய அதிகாரியினால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts