வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. சாரதியின் திறமையினால் முச்சக்கர வண்டியிலிருந்து பாய்ந்து உயிர் தப்பித்தார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் புதுக்குளம் சந்திப் பகுதியில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறை பயணித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.
பாதுகாப்பு அற்ற ரயில் கடவையை முச்சக்கர வண்டி கடக்க முற்பட்ட போது, தொடருந்துபயணித்ததால் அதன் இயந்திரம் இயக்கமற்றது. அதனால் சாரதி முச்சக்கர வண்டியிலிருந்து பாய்ந்து தப்பித்தார். முச்சக்கர வண்டியை மோதிய தொடருந்து சுமார் 400 மீற்றர் இழுத்துச் சென்று இயக்கத்தை நிறுத்தியது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.