அம்பாரை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை - சவளக்கடை ஊடான கிட்டங்கி பாலத்திற்கு மேலால் வெள்ளநீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய முகாம், சவளக்கடை, நாவிதன்வெளி, அன்னமலை மற்றும் சொறிக்கல்முனை போன்ற பிரதேச பொதுமக்கள் பொக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நாவிதன்வெளி பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அலுவலகம் உட்பட அரச அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்கள் இந்தப் பாலத்தை கடந்தே செல்லவேண்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாலம் ஊடான போக்கு வரத்து தடைப்படும்.
இதேவேளை மாவட்டத்தின் கரையோர தாழ்நிலப் பிரதேசங்ககள், வயல் நிலங்கள் போன்றவற்றிலும் வெள்ள நீரால் நிரம்பிவருகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.