-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான் சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய எடுத்துச்சென்ற மூவர் பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினரால் (21) மாலை கைது செய்யப்பட்டனர்.
பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயன்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிட விதான வழிகாட்டலில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.சி.டி.ஏ ரத்நாயக்க, எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் (IP) தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன்போது 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க மல்வத்தை பகுதியை சேர்ந்த இருவரும் வரிப்பத்தான்சேனை பகுதியை சேர்ந்த மற்றொருவருமாக மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் மற்றும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஜ முத்துக்கள் என்பன இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.