உள்நாடு | அரசியல் | 2021-10-14 16:55:03

நாமல் ராஜபக்ச மருதமுனைக்கு வருகை; 65 மீட்டர் வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு

(ஏ. எல்.எம்.ஷினாஸ்,எம்.எம்.ஜபீர்,சர்ஜூன் லாபிர், எம்.என்.எம்.அப்றாஸ்)

விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச  நேற்று (12.10.2021) மருதமுனை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருதமுனை பிரதேசத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பிரதேசத்தின் மேட்டுவட்டை பகுதியில் கட்டப்பட்ட 178 வீடுகளில்  இதுவரை பகிர்ந்தளிக்கப் படாமல் கிடக்கும் 78  வீடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சரினால் உத்தரவு வழங்கப்பட்டது.

வீட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ச பொது மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கும்  அமைச்சர்  கருத்துத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,  மிக விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி, அமைச்சரின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹ்ரூப், பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் இசட்.எம் . நௌஷாத் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts