உள்நாடு | அரசியல் | 2021-10-01 12:14:56

அரசியலுக்கு அப்பால் மக்களின் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அரசியலுக்கு அப்பால் மக்களின் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். எதிர்வரும் 2022ஆம் ​​ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  (30) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், இன்றைய காலகட்டம் தேசிய அரசியலில் சவால் மிக்க ஒரு காலகட்டமாக காணப்படுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச அவர்கள் எதிர்வரும் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிக நுட்பமான முறையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருகிறார்.

கல்முனைப் பிராந்தியத்தை பொறுத்தளவில் இங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பிராந்தியத்தின் நலனுக்காகவும் பொதுமக்களுக்குரியதாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

பொது மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்ற போது, வேலைத்திட்டத்தை பூரணமாக நிறைவேற்றும் திட்டங்களா அமைய வேண்டும். அதேபோன்று அரச உத்தியோகத்தர்களும் அரசியல்வாதிகளும் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல்  மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எமது கல்முனை பிராந்திய ஆட்புல எல்லைக்குள் மக்களுக்கு பிரயோசனமான பணிகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதை தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு முன் நோக்கி  செல்கின்றோம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எவ்வாறாயினும் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விடயமாகும் என்று தெரிவித்தார்.

இதன் போது, பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் ஒரு  பிரிவுக்கு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
 

இதில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ,பிரதேச செயலாளர் ஜெ. லியாகத் அலி, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜவ்பர், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் உட்பட திணைக்களத்தின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.​


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts