(ஏ.எல்.றியாஸ்)
பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யூ.அப்துல் சமட் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் Covid - 19 சைனோபாம் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெற்றன.
பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் எனது மேற்பார்வையின் கீழ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பொத்துவில் ஆதார வைத்தியசாலை, பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், கோமாரி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம், சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயம் உள்ளிட்ட நான்கு நிலையங்களில் கடந்த மூன்று தினங்களாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சுகாதாரத்துறையினரின் குடும்பத்தினர்களுக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும், இராணுவத்தினர் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோமாரி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
அத்துடன், இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், இலங்கை போக்குகுவரத்து சபை ஊழியர்களுக்கு மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திலும், கடற்படை, விசேட அதிரடிப்படையினர், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்பார்த்ததை விட மக்கள் விழிப்படைந்து தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர். எதிர்வரும் காலங்களில் மக்களின் நன்மை கருதி கிராம உத்தியோத்தர் பிரிவு ரீதியாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.