ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் சினோ பாம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணி தாய்மார் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் போன்ற பிரதேசங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் மருதமுனை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு மருதமுனை வைத்தியசாலையிலும் தடுப்பு ஊசி ஏற்றப்படும்.
இதே நேரம் பிரதேச செயலகங்க உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உட்பட முன்னுரிமை தரப்படுத்தல் அடிப்படையில் அரச திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கும் குறித்த தினத்தில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மருதமுனை அல்- மதீனா வித்தியாலயத்திலும், நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்திலும் கல்முனைக்குடி, கல்முனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.