நூருல் ஹுதா உமர்
இலட்சியங்களை இலகுவாக வெல்வதற்கு இறைதூதர் இப்றாஹிமின் திடகாத்திரம் வழிகோலுமென அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம், சபீஸ் தெரிவித்தார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொடர்ந்த சம்பிரதாய உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
உன்னத சமுதாயத்தை உருவாக்குவதற்காக அல்லாஹ்வின் உத்தரவைச் செயற்படுத்துவதில் திடகாத்திரமாகச் செயற்பட்டவர்தான் இறைதூதர் இப்றாஹிம். அன்னாரின் அர்ப்பணிப்புக்களை அல்லாஹ் முழு சமூகத்துக்கும் மார்க்கமாக்கி இருக்கிறான். ஹலாலான ஹாஜத்துக்களை இப்றாஹிம் நபியின் இலட்சிய வழிகளில் அடைய முடியும். இதை முன்னுதாரணமாக்கி த்தான் கொரோனாக்கால சவால்களிலும் நாங்கள் வெற்றி கொண்டு வருகிறோம்.
நமது சமய நம்பிக்கைகளைக் கடைசி வரைக்கும் பாதுகாப்பதில் இறைதூதர் இப்றாஹிமிடமிருந்த கொள்கைத் திடகாத்திரங்கள் தான் எங்கள் பணிகளுக்கும் பலம் சேர்த்தன. இது மாத்திரமல்ல சத்தியமுள்ள எந்த விடயமானாலும் பொறுமை மனவுறுதியுடன் பயணித்தால் வெற்றிகிட்டிவிடும். இந்த நம்பிக்கையுடன் தான் எங்கள் பணிகள் தொடர்கின்றன. பெருநாள் தினங்களில் நிகழ்த்தப்படும் சம்பிரதாய உரையை ஆற்றுவதற்கு அருள்பாலித்த அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
கண்ணியமிக்க வொலியுல்லாஹ் அடங்கியுள்ள அக்கரைப்பற்று ஜும்ஆ பெரியபள்ளிவாசல் தலைமையைப் பொறுப்பேற்றுள்ள எனக்கு இந்தப்புனித மஸ்ஜிதின் தேவைப்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஹாஜத்தும் இருக்கிறது அதேபோன்று .நமது சமூகத்தின் கல்வி மேம்பாடுகளிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். எனவும் தமது பள்ளிவாசல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் ஜமாஅத்தினருக்கு முன்வைத்தார். மேலும் பள்ளிவாசலில் கடமைபுரிந்து கொரோனாத் தொற்றில் உயிரிழந்த மர்ஹும் செய்னுலாப்தீன் ஆசிரியருக்கு பாத்திஹா ஓதி இதன்போது பிரார்த்தனையும் செய்யப்பட்டது.