(சர்ஜூன் லாபிர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடந்த 02ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேவையாளர்; பிரிவு இன்று (17) காலை 6.00 மணியுடன் தளர்த்தப்படுவதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தெரிவித்தார்.
மருதமுனை-03 கிராம சேவையாளர்; பிரிவை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது சம்மந்தமாக உயர் மட்டக் கலந்துரையாடர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய (16) கல்முனையில் நடைபெற்றது. இதன்போதே வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறித்த கிராம சேவையாளர் பிரிவில் 14 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் அறிவிப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இதனையடுத்து இக் கிராம சேவையாளர் பிரிவை விடுவிப்பதற்கான பரிந்துரை தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்ட நிலைமை; தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவ் உயர் மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.