(ஏ.எல்.எம்.ஷினாஸ்,ஹூதா உமர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு சுகாதார பணியாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி இன்று (14) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுகாதார அமைச்சின் கீழ் நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் டெங்கு தடுப்பு பணியாளர்களாக நாம் கடமையாற்றி கொண்டிருக்கின்றோம்.
தற்போது அரசாங்கத்தின் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் தம்மையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் மூலம் அறிய கிடைத்தது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்களுடைய சேவையோடு எம்மை இணைத்து பார்க்க வேண்டாம். நாம் கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகின்றோம்.
எனவே எமக்கான நியமனத்தை சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதாரத்துறையில் வழங்க வேண்டும். தற்போது நாட்டில் Covid - 19 கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் எவ்வித தங்கு தடைகளும் இன்றி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். இன்றும் எமது பகல் நேர உணவு நேரத்தை தவிர்த்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
எனவே எமது நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்க வேண்டும். என்று சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டவாறு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.