(ஏ.எல்.எம்.ஷினாஸ்,பாறுக் ஷிஹான்)
அம்பாரை மாவட்ட பெண்கள் வலையமைப்பு சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 26 ஒக்சிஜன் சிலிண்டர்கள் (Cylinders) மற்றும் ரேகுலேட்டர்களை(Regulators) கையளிக்கும் நிகழ்வு இன்று (09.07.2021)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம் அன்சார், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி. கலைவாணி தயாபரன் உட்பட பிரதான வைத்தியசாலைகளில் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நேரத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் சேவைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது மக்களுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குரியது. தொடர்ந்தும் இவர்களுடைய சேவை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.