(பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம்.மூஸா)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மருதமுனை- 3 கிராமசேவையாளர் பிரிவு கடந்த 2ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் முன்வந்து நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்று (06) மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஒன்றிணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வசிக்கின்ற 1575 குடும்பங்களுக்கும் முதல்கட்ட நிவாரணத்தை வழங்கி இந்தப் பணியை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த முதல்கட்ட நிவாரணத்தின் போது அத்தியாவசியமாக மக்களுக்கு தேவையான அரிசி வழங்கப்பட்டது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர்.எம்.அஸ்மி, கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, ஜம்இய்யத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், Covid - 19 தடுப்பு செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன் போது இங்கு கருத்து வெளியிட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை தொடர்ந்தும் நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். தற்போது வழங்கப்படுகின்ற இந்த நிவாரணப் பணியானது எமது முதல் கட்ட ஆரம்ப பணியாகும் என்று தெரிவித்தனர்.
நிகழ்வின்போது ஜம்இய்யா மற்றும் சம்மேளனத்தின் சார்பில் கலாநிதி அஷ்செய்க் எம். எல். முபாறக் (மதனி), அஷ் செய்க் எம்.ஐ.எம் குசைனுத்தீன் (றியாழி), ஜனாப் ஏ.ஏ.புழைல், எம்.எல்.எம்.ஜமால்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.