(எமது செய்தியாளர்கள்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவி உயர்வு 09.08.2021 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.
இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் சமூகவியல் முதற்தொகுதி மாணவராக கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, முதல் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர். பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் இள வயதில் (43) உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 3 பேர்களின் பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.