- அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் கைது
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் 5.10 மணியளவில், மட்டக்களப்பு, சின்ன ஊரணி பகுதியில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக, முச்சக்கரவண்டியில் சென்ற டிப்பர் சாரதி ஒருவர் மீது, இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கர வண்டியில் வந்த நபருக்கும் இடையில் மண் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே இடம்பெற்ற வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் காயமடைந் நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட, குறித்த கான்ஸ்டபிள், அவரது துப்பாகியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பு, சின்ன ஊரணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என தெரியவருகின்றது.