உள்நாடு | விஞ்ஞான தொழில்நுட்பம் | 2021-06-17 12:58:51

சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பி வைப்பு

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி   உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக  தியாங்காங் என்று  விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. 

இந்த விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 

சீனா முன்னர் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே கோர் கேபின் தொகுதியை ஏப்ரல் 29 அன்று லாங் மார்ச் -5 பி கேரியர் ராக்கெட் வழியாகவும், தியான்ஜோ -2 சரக்கு விண்கலத்தை லாங் மார்ச் -7 வழியாக மே 29 அன்று அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து அதாவது மே 29ம் தேதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா அறிவித்திருந்தது. 

இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விழாவாக இன்று நடைபெற்றது. நீ ஹைஷெங், லியு போமிங் ,மற்றும் டாங் ஹோங்போ என  விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர். இதன் தொடர்ச்சியாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் ஷென்ஜோ -12 விண்கலம் செலுத்தப்பட இருந்த ஜுகுவான் ஏவுதளத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு  மரியாதை செலுத்தியதை அடுத்து அவர்கள் விண்கலத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். 

இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு நடத்துவர். 

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் சீனா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது இதுவே முதல்முறையாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts