(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை 13 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (17.05.2021) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்தப்பட்டது. இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தின் இயல்பு நிலை இன்று வழமைக்கு திரும்பியது.
பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்ல்களை பின்பற்றி சுகாதார சட்டவிதிமுறைகளுக்கு அமைய தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் நடைபெற்றன. உள்ளுர் மரக்கறி வகைகள் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட போதிலும் மலைநாட்டு மரக்கறி வகைகள் கூடிய விலையில் விற்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பொதுப் போக்குவரத்து சேவைகளும் சுமுகமாக நடைபெற்றதை காணக்கூடியதாக இருந்தது. பயணிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார சட்ட விதிமுறைகளுக்கமைய பயணம் செய்தனர்.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து விசேட கண்காணிப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த போக்குவரத்து மற்றும் ஒன்றுகூடல்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்வதுடன் சுகாதார விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.