-மாளிகைக்காடு நிருபர்-
காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வுகளிற்காக தவிசாளருக்கு தேவையான சில ஊடகவியலாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். மாறாக சபை அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்க வரும் சில ஊடகவியலாளர்களுக்கு தவிசாளரினால் அனுமதி மறுக்கப்படுகின்றது. இதனால் சபையில் நடக்கும் பல விடயங்கள் மக்களுக்காக சென்றடைவதில்லை. நாம் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மக்கள் பிரதிநிதியாக சென்றுள்ளோம். எனவே மக்கள் சார்பான கோரிக்கைகளை சபையில் தவிசாளரிடம் முன்வைக்கின்றபோது அவை செயலிழந்து காணப்படுகின்றது. இதனால் சபையில் மக்களுக்காக ஒலிக்கும் குரல்களை மக்கள் அறிவதில்லை என காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் K. குமாரசிறி விசனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சபை அமர்வுகளில் செய்தி சேகரிக்க வரும் சில ஊடகவியலாளர்கள் தவிசாளரின் செய்திக்காக மட்டும் பேனாவை பாவிக்கின்றனர். சபை அமர்வுகளை நேரலையாக மக்கள் பார்ப்பதற்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே தவிசாளருக்கு தைரியமிருக்கு மென்றால் மாதாந்த சபை அமர்வுகளை நேரலையாகவோ அல்லது சபை அமர்வின் பின்னர் செய்தியாக மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.