(அஸ்லம் எஸ் மௌலானா)
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
இம்முறை எமது கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 05 மாணவிகளுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய இம்மாணவியர்கள் ஐந்தாவது தொகுதியினராவர். முன்னைய 04 தொகுதி மாணவிகளும் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, அவர்களுள் பலர் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியிருந்தனர்- என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருது பிரதேசத்தில் பெண்களின் ஆன்மீகக் கல்விக்கான கலங்கரை விளக்காகத் திகழ்கின்ற தைபா அரபுக் கல்லூரியானது பெருமளவு பெண் பட்டதாரிகளையும் மௌலவியாக்களையும் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.