அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்திய முகாம் - 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் ( வயது 29) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று (28) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நாவிதன்வெளி மத்திய முகாம் சாளம்பைக்கேணி - 04 ஆரிப்தீன் வீதியை அண்டிய அணைக்கட்டு
வயல்வெளிப்பகுதியில் மரங்கள் நிறைந்த பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பாழடைந்த வளவில் சிறிய மரம் ஒன்றில் சாரம் உடையால் போடப்பட்ட தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரது உடல் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிசார் குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நபரை அப்பகுதிக்கு அழைத்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படும் மரம் மிகவும் சிறிய மரமாக காணப்படுவதால், கொலைசெய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டு இருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த கூலி வேலை மற்றும் மீன் வியாபார தொழிலில் ஈடுபட்டு வரும் உயிரிழந்துள்ள நபருக்கு ஆறு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.