உள்நாடு | சமூக வாழ்வு | 2021-03-31 14:18:21

பாலமுனை அரபுக் கலாசாலை, மையவாடி என்பவற்றுக்கு ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் குடிநீர் வசதி

(அஸ்லம் எஸ் மௌலானா)

அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாஸா மையவாடி மற்றும் மசாஹிருல் உலூம் அரபுக் கலாசாலை என்பவற்றுக்கு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் இன்று உரிய இடங்களுக்கு விஜயம் செய்து இவற்றைக் கையளித்தார்.

இதன்போது பாலமுனை ஜனாஸா மையவாடிக்கு மிகவும் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த நீர்த்தாங்கியுடன் குடிநீர் குழாய்த்தொகுதிகளும் அமைக்கப்பட்டு, பாவனைக்காக கையளிக்கப்பட்டதுடன் ஜனாஸா நலன்புரி வேலைத் திட்டத்திற்காக ஒரு தொகை நிதியும் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அவ்வாறே மசாஹிருல் உலூம் அரபுக் கலாசாலையில் ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் அமைக்கப்பட்ட பொதுக்கிணறும் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பானது வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள், விகாரைகள் மற்றும் கல்வி, கலாசார, சமூகம் சார் நிறுவனங்களுக்கும் வசதி குறைந்த பொது மக்களுக்கும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவதுடன் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts