மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் மியன்மார் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மியன்மாரின் Nay Pyi Taw நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் பொதுமக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் இறப்பர் குண்டு தாக்ககுதலை மேற்கொண்ட போதே இவ்வாறு காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மியன்மாரில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அந்த நாட்டு இராணுவம் தடை விதித்ததையடுத்தே பொதுமக்கள் இவ்வாறு போராட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.