(ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், நூூறு ல் ஹூதா, றாசிக் நபாயிஸ், ஐ.எல்.எம். நாஸிம், எம்.என்.எம்.அப்றாஸ்)
கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என அறியப்படும் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் எழுதிய "துளி அல்லது துகள் " இலக்கிய நூல் அறிமுக விழா இன்று சனிக்கிழமை (30) காலை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலக்கியவாதியுமான அம்ரிதா ஏயேமின் தலைமையில் நடைபெற்ற இந்நூல் அறிமுக விழாவில் சிறப்பு பேச்சாளராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் நூல் வெளிட்டாளர்களான பேஜஸ் புத்தக இல்ல முதல்வரும் ஆய்வாளருமான இலக்கியவாதி சிராஜ் மஸூர் பதிப்புரையை நிகழ்த்தினார். பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதிகளுமான உமா வரதராஜன் மற்றும் கவிஞர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார்கள்.
பூமிக்கடியில் வானம், பறவை போல சிறகடிக்கும் கடல், எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும், மழையை மொழிதல் என நான்கு கவிதை தொகுப்புக்களையும், விலைப்பட்டியல் கொலைப்பட்டியல் மு.கா தேசிய பட்டியல் மற்றும் 07வது ஜனாதிபதி தேர்தலும், முஸ்லிம் அரசியலும் எனும் இரு அரசியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ள சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராவார்.