கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2021-01-26 08:46:33

சகலதுறை ஆட்டக்காரராக இருந்த வித்தகர் நூருல் ஹக் மரணித்தாலும் எழுத்துக்களால் எம் மனங்களில் வாழ்வார் : ஹரீஸ் எம்.பி இரங்கல்.

(ஹுதா உமர்)

சாய்ந்தமருதின் வரலாற்றில் ஒருசிலரை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. அப்படியான ஒருசிலரில் இன்று இறையடி சேர்ந்த இலக்கிய ஆளுமை எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களும் ஒருவர். தொடர்ந்தும் சமீபத்தைய நாட்களில் சாய்ந்தமருதின் இலக்கிய ஆளுமைகள் மரணித்து வருவது கவலையளிக்கிறது. குறுகிய நாள் இடைவெளியில் கலைமகள் ஹிதாயா றிஸ்வி, மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் வரிசையில் இன்று நாம் பன்னூல் ஆசிரியர் எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களை இழந்திருக்கிறோம் என ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில்.

இலக்கியம், ஆன்மீகம், அரசியல், முதலான பலதுறை சார்ந்த தனது கருத்துக்களை பதிவு செய்த துணிச்சலான படைப்பாளி அவர். மிகவும் நுணுக்கமாக வாதங்களை முன் வைக்கவல்ல விவாதத்திறன் கொண்டவர். இவரின் இழப்பு தமிழ் இலக்கிய துறைக்கும் மாத்திரமின்றி முஸ்லிம் விமர்சன அரசியல் துறைக்கும் ஊடகத்துறைக்கும் மிகப்பெரும் இழப்பாக நான் பார்க்கிறேன். இருந்தாலும் அவர் எம்மத்தியில் விட்டுச்சென்றுள்ள அவரது எழுத்துக்களின் வாயிலாக எம்முடன் எப்போதும் வாழ்வார்

பல நூல்களின் வாயிலாகவும், ஊடக பேனாமுனையினாலும் இலங்கை முஸ்லிங்களின் இருப்பை மாத்திரமின்றி சமூக அவலங்களை அழுத்தமாக பதிவு செய்த இந்த சகலதுறை ஆட்டக்காரர் இன்று எங்களை பிரிந்திருப்பது கவலையளிக்கிறது. என்னுடைய அரசியல் பயணத்திலும் இவரது எழுத்துக்கள் மிகப்பெரும் வழிகாட்டலாக அமைந்திருந்தது என்பதை இங்கு பெருமையுடன் பதிவுசெய்து வைக்க விரும்புகிறேன்.

ஆன்மீகம், அரசியல், சமூக விடயங்களில் சகோதரர் நூறுல் ஹக் நாட்கணக்கில் பேசவல்ல ஆய்வுத்திறன்  கொண்டவர். தனது கருத்துக்களை இலகுவில் சமரசம் செய்யாத ஆளுமை கொண்ட அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில் அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிராத்திக்கிறேன்
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts