பிராந்தியம் | அரசியல் | 2021-01-10 17:40:41

நினைவுத்தூபியை மீள கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)      

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்தமையானது தமிழ் மக்களின் உரிமைகளையும் ஜனநாயக செயற்பாடுகளையும் குழிதோண்டி புதைப்பது போன்றதாகும். எனவே இந்த நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மாநகரசபை உறுப்பினர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கைவாழ் தமிழ் மக்கள் அவர்களுடைய சமய சம்பிரதாயங்களை செய்வதற்கு இன்று பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது உறவுகளின் நினைவுத் தூபியை  உடைத்து இருப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற  அடியாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இராணுவத்தளபதி இந்த விடயத்திற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் அரசாங்கம் திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுகின்றது. என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. அரசாங்கத்தோடு இணைந்து கொண்டிருக்கின்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அது அங்கஜன் இராமநாதன் என்றாலும் சரி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது வியாழேந்திரன் அண்ணன் என யாராக இருந்தாலும் சரி அரசாங்கத்தோடு இருக்கின்றவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய உரிமைப் போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கும். ஆனால் இன்று அவற்றை செய்ய முடியாத, வாய்திறக்க முடியாத அபாயமான சூழலில் பயமாக இருக்கின்றது. பேசினால் கெரோனா என்ற காரணங்களைச் சொல்லி சிறையில் அடைப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

எனவே அரசாங்கத்தோடு இணைந்து இருக்கின்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். நாளைய தினம் (11.01.2021) வடக்கு கிழக்கு உள்ளிட்ட மலையகம் தென் பிரதேசங்களிலும் வாழுகின்ற முழு சமூகமும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஒன்றிணைந்து  கடையடைப்பு செய்து கவனஈர்ப்பு கர்த்தாலுக்கு ஆதரவை வழங்க வேண்டும். இதற்கான அறைகூவலை நான் விடுகின்றேன்.

நினைவுத்தூபியை மீண்டும் கட்டுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க  வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts