உள்நாடு | சமூக வாழ்வு | 2021-01-02 17:40:49

கொரோனா தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்த தன்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் - புதிய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .ஏ.ஆர்.எம்.அஸ்மி

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,றாசிக் நபாயிஸ்)    

கல்முனை தெற்கு சுகாதார சேவை வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது,

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  பாரிய சவால் மிக்க ஒரு  சூழலில்  இங்கு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். சுகாதார தரப்பினர் பக்கமும் பொதுமக்கள் பக்கமும் இருக்கின்ற பிரச்சினைகளை சுமுகமான நிலைக்கு கொண்டுவந்து விரைவில் கொரோனா  தொற்றுநோய் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றுவேன்.  பொது சுகாதார பரிசோதகர்கள் எல்லோரும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள்.  அவர்களோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.


தொற்றா நோய்களின் தாக்குதல் தாக்கம் குறித்தும் பாரிய விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மருதமுனை வைத்தியசாலையில் கடமையாற்றிய போது நான் முன்னெடுத்து வந்திருக்கிறேன். அந்த அனுபவங்களையும் பயன்படுத்தி கல்முனை தெற்கு சுகாதார பிரிவு முழு இலங்கைக்கும் முன்மாதிரியான ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.  இந்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஏ.எம்.பாறூக், பொதுச் சுகாதார பரிசோதகர்களான அப்பாஸ் எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுத்தீன், ஜ.எல்.எம்.இத்ரிஸ், எம்.ரவிச் சந்திரன், எம்.ஜுனைத்தீன், பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர் எச்.ஏ.சி.பெரேரா, மேற்பார்வை மருத்துவ மாது உத்தியோகத்தர் எம்.எச்.யூ.சல்மா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.ஹாறூன், நிகழ்ச்சி திட்டமிடல் உத்தியோகத்தர் சகுந்தலா, சுகாதார உதவியாளர் ஏ.சேக் அப்துல்லாஹ் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts