(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மனித உள்ளங்களை பண்படுத்தும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கின்றது எனக் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை பிரதேச கலாசார அதிகாரசபை என்பன இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய விழா இன்று (23.12.2020) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும்போது, மனித குணங்களை பண்படுத்துகின்ற பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கின்றது. கலை, கலாசார சமூக, பண்பாட்டு, இலக்கியங்கள் மனிதர்களை பண்படுத்தி மனங்களை தூய்மை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று வெளியிடப்படுகின்ற 'முனை இலக்கியம்' என்ற இந்த நூல் கல்முனை பிரதேசத்திலுள்ள மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை ஆகிய பிரதேசங்களின் சமூக, பண்பாட்டு, கலை இலக்கியங்களை அடையாளப்படுத்தும் ஆவணப் பதிவாகும் என்றார்.
இந் நிகழ்வில் கணக்காளர் வை.கபீபுல்லா, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ. ஆர். எம்.சாலிஹ், ஒலிபரப்பாளர் பஸீர் அப்துல் கையூம், கலாசார அதிகார சபையில் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹிபானா ஜிப்ரி உட்பட பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு நடைபெற்றதுடன் பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.