(ஹுதா உமர்)
இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆடை எது என்று தெரியாத ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் இருப்பது கவலைக்குரியதாகும் என அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் தவிசாளர் ருஷ்தி நாசிர் தெரிவித்தார்.
நேற்று (25) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது அண்மையில் தேசிய உடை அணிந்து அதற்கு மேலால் சத்ரி எனும் ஆடை அணிந்து சென்ற தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுள்ளாவை பார்த்து ஐ எஸ் ஐ எஸ் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சத்தமிட்டது அவரின் ஐ எஸ் ஆடை எது என்ற அறியாமையை காட்டுகிறது.
ஐ எஸ் என்பது முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பெரும்பாலும் அரபிகளாகவே இருந்தனர். தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுள்ளா அணிந்த ஆடை என்பது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பொது மக்களின் ஆடையாகும். அந்த ஆடை ஐ எஸ். ஐ.எஸ் கென்ற தனியான ஆடை என அறிமுகம் பெற்றதல்ல.
தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுள்ளாவின் ஆடை பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு மாற்றமாக இருப்பின் அது பற்றிய ஒழுங்கு பிரச்சினையை எழுப்பியிருக்க முடியும். அதனை விடுத்து ஐ. எஸ் ஐ எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.