(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையை சேர்ந்த சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் இன்று திங்கட்கிழமை (21) மாலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, பதவியேற்றுக் கொண்டார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.ஜி.எம்.நதீர், முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான உறுப்பினராக பதவி வகித்து வந்த தாஜுதீன் முபாரிஸ், இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திக்கே சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் அவர்கள் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை கட்சியின் மீளழைத்தல் கொள்கைக்கமைவாக சுழற்சி முறையில் மூன்றாவது உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.