(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவ அமைப்பான 'மனாரியன்- 99' நண்பர்கள் வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் "நாம் உதிரம் கொடுப்போம் உயிர்காக்க உதவிடுவோம்" எனும் தொனிப்பொருளில் அமைப்பின் தலைவர் எம்.ஜ.முஹம்மட் சியாப் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (2020/09/20) மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுகளில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யும் நோக்கில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக இம்முறையும் இரத்த வங்கி முகாம் இடம்பெற்றது. வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் அணுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு இரத்த வங்கி பிரிவின் வைத்தியர்களான டாக்டர்: கே.வித்தியா, டாக்டர்.ஜ.எல்.டிலாரஸ் பானு மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் இரத்தங்களை சேகரிக்கும் கடமைகளில் ஈடுபட்டனர்.
ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்ட இந்த இரத்த தான முகாமில் முதலாவது இரத்த கொடையாளியாக அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜெ.அப்துல் ஹசீப் கலந்து கொண்டு முதலாவதாக இரத்ததானம் வழங்கி வைத்தார்.