(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
தீப்பற்றிய எம்.ரி. நியூ டயமன்ட் கப்பலின் கெப்டன் கடற்படையினரின் உதவியுடன் நேற்று (10.09.2020) மாலை 7.30 மணியளவில் கல்முனை கடற்படை முகாம் வழியாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட தீப்பற்றிய எம்.ரி. நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டுக் கெப்டன் கடற்படையினரின் உதவியுடன் கொரோனா பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட்ட விசேட வேன் வாகனத்தில் கல்முனையிலிருந்து காலிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இலங்கையின் தென்கிழக்கு திசையிலுள்ள சங்கமண்கண்டி கடற்பரப்பில் 38 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த எரிபொரள்தாங்கிக் கப்பல் கடந்த 03ஆம் திகதி காலை 8.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
ஏம்.ரி.நியூடயமன் எனப் பெயரிடப்பட்ட இக்கப்பல் பணாமா நாட்டுக் கொடியுடன் குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து மசகெண்ணையையும் டீசலையும் ஏற்றிக் கொண்டு இந்திய ஒடிசா மாநில பாரதீப் துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 330 அடி நீளமான கப்பலில் 23 மாலுமிகள் பயணித்துள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர 22 பேரும் இலங்கை கடற்படையினரின் துணிகரமான செயலால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குப்பலில் இருந்து மீட்கப்பட்ட 16 பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் 04 கிரேக்க பிரஜைகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்தவாரம் கொண்டுசெல்லப்பட்டு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தக் கப்பலில் இருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமியான பொறியியலாளர் எல்மோ கல்முனை கடற்படை முகாமினரின் உதவியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையினர் கடந்த 07 நாட்களாக தொடர்ந்தும் அனர்ந்த மற்றும் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.