(ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட த்தில் அமைந்துள்ள மாநகர சபைகளில் ஒன்றான கல்முனை மாநகர சபையில் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் ஊழல்கள் நடைபெற்றுவருவதாகவும் அதனை குறித்த துறைக்கான உயரதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதாகவும் குற்றம் சுமத்தி அப்பிரதேச பொதுமக்கள் சிலரால் இன்று (21) மாலை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
அரசாங்கம், மாகாண ஆணையாளர், கல்முனை மாநகர ஆணையாளர், முதல்வர், அடங்கலாக உயரதிகாரிகள் பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷமெழுப்பியவர்களாக கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலிருந்து கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை அமைந்துள்ள பிரதேசம் வரை நடைபவனியாக வந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அரச உயர்மட்டங்களுக்கு அனுப்பவேண்டி கல்முனை பிரதேச செயலக பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
கல்முனை மாநகர சபையினுள் அதிகமான ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், சிற்றூழியரினால் அரச அதிகாரிகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், தட்டிக்கேட்கும் மாநகர சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் அடிக்கடி தாக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்ட காரர்கள் இதன்போது குரலெழுப்பி கோஷமிட்டதுடன் கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனவுக்கு ஆதரவு தெரிவித்தமையை காரணம் காட்டி எங்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் குற்றம் சாட்டினார்.