(ஹுதா உமர்)
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்க்கு தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை மருதமுனை முக்கியஸ்தர்கள் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், வாக்களித்த மருதமுனை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நேற்று (14) மருதமுனை சமூகவள மத்திய நிலையத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் நடந்து முடித்த தேர்தலில் கல்முனை தொகுதியில் மருதமுனை பிரதேசத்தில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் வழங்கி வெற்றி பெற வைத்த மருதமுனை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுணர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ் உமர் அலி, எம்.நவாஸ், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.முபாரிஸ் கட்சியின் மருதமுனை இளைஞர் அமைப்பாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.