அரசியலுக்காக இனவாதமாக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசி ஒற்றுமையாக வாழும் சமூகங்களை விரிசலடையச் செய்யும் சகல அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பொதுமக்கள் வெறுத்தொதுக்க வேண்டும் எனவும் இந்த நாட்டில் ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை ஜனநாயக முன்னணி சார்பில் சுயட்சை குழு இலக்கம் 18 இல் போட்டியிடும் வேட்பாளர் என்.எச்.உமர் லெப்பை தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக முன்னணி சார்பில் சுயட்சை குழு இலக்கம் 18 இல் போட்டியிடும் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அங்கு கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னொரு காலத்தில் தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சுதந்திரம்,உரிமைகள், அபிவிருத்திகள் பற்றிப் பேசப்பட்டு மக்களுக்கான சேவைகளை பெற்றுத்தருவோம் என்று பேசினர். இன்று அவற்றுக்கு பதிலாக இனவாதமும் பிரதேசவாதமுமே பேசப்படுகிறது. சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளை சரியாக பெற்று கொண்டு இந்நாட்டில் வாழ வேண்டும் என்ற கருத்து ஏற்று கொள்ளக்கூடியது ஆனாலும் அதையே இனவாத முலாம் பூசி விஷக்கருத்தாக மக்கள் மத்தியில் திணிக்க கூடாது.
அத்தோடு இப்பொழுது ஆட்சியிலுள்ள மொட்டு ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ள விடயம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதேயாகும். அதனை பெறுவதற்கான சகல ஆயத்தங்களும் அவர்கள் செய்கிறார்கள். அவர்களின் வியூகம் வென்று அதன் பங்காளிகளாக சிறுபான்மை இன மக்கள் இருப்பது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
நாங்கள் கடந்த காலங்களில் பெரும்பான்மை மக்களின் முடிவுக்கு எதிராக இருந்து வந்தமையானது அன்று அவர்கள் சிறுபான்மையினத்தவர்கள் யாரிடமும் எதுவும் கேட்கத் தேவையில்லை எங்களுக்கு பெரும்பான்மையின மக்கள் தந்த அதிகாரம் இருக்கின்றது என்ற சர்வாதிகார நிலைமை உருவாக்கியது. அந்த முடிவு இந்த நாட்டை மேலும் சிக்கலுக்கள் இழுத்துச் செல்லும் நிலையிலையே இருந்தது. அந்த நிலையை தட்டிக் கேட்க ஆளில்லை என்ற நிலை வரும் போது இந்த நாட்டுக்கு எப்பொழுதுமே ஆபத்து.
ஆதலால் ஆளும் தரப்புடன் இணைந்து நாங்கள் எங்களின் பலன்களை அடைந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை மிகுந்த தலைவர்களாக கிழக்கில் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், வடக்கில் ஈ பி.டி.பி தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மலையகத்தில் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவருமான அமரர் ஆறுமுகமும் இருந்து தமது பிரதேசங்களுக்கு தேவையானவற்றை அவர்களிடமிருந்து சாதித்து கொண்டுள்ளனர்.
இது போன்றே இப்போதும் சிக்கலில் தவிக்கும் சிறுபான்மை சமூகம் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்