உள்நாடு | அரசியல் | 2020-07-30 18:17:15

கல்முனையை ஹரீஸிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது : தேசிய காங்கிரஸ் வேட்பாளர் றிசாத் ஷரிஃப்

கல்முனையை பாதுகாக்க எங்கள் தொகுதி டெலிபோன் வேட்பாளர் தனது சின்னத்திற்கு வாக்களிக்க கேட்கிறார். இவரே தான் ஞானசார தேரர் கருணா அம்மன் போன்றோரை வாக்கு வேட்டைக்காக கல்முனைக்கு அழைத்து வந்து தேர்தலுக்கு பயன்படுத்துகிறார். கல்முனையில் பல வருடங்களாக உள்ள பிரச்சினைகளில் ஒன்றைக்கூட தீர்க்க திராணியற்ற இவர் இப்போது கல்முனையை பாதுகாப்பதாக கூறுவது கூரையேறி கோழிபிடிக்க தெரியாதவன் ஆகாயம் ஏறி நட்சத்திரம் பறிக்க போவதாக சொல்வது போன்றுள்ளது. என தேசிய காங்கிரஸின் கல்முனை தொகுதி வேட்பாளர் றிசாத் ஷரிஃப் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தில் நேற்றிரவு (29) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

நமது நாட்டு மக்களின் அரசியல் விடுதலைக்கான கட்சியாக தேசிய காங்கிரஸ் கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இப்போது மட்டுமல்ல எப்போதும் கல்முனை மக்களான நமக்கான குரலாக தேசிய காங்கிரசின் குரல் இருந்து வந்துள்ளது. அந்த குரலை பலப்படுத்துவதால் மாத்திரமே கல்முனை மக்களான எங்களினதும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களினதும் வாழ்வும், நிம்மதியும் நிலைக்கும் மற்றுமின்றி தேசத்தின் சுபீட்சமும் அந்த புள்ளடியிலையே தங்கியுள்ளது. கடந்த 20 வருடங்களாக எங்களுடைய வாக்குகளை பெற்று அரசியல் பிழைப்பு நடத்தி வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராலோ அல்லது எமது பிரதேச பிரதிநிதிகளினாலோ எமது முஸ்லிம் சமூகத்தின் சார்பிலான எந்த ஒரு விடயங்களையும் சாதிக்க முடியாது போகியுள்ளது. தற்போது தமது ஆசனங்களை பெற்றுக்கொள்ள மக்களை சூடாக்கி வாக்குகளை கொள்ளையடிக்கும் இனவாத, பிரதேசவாத சூழ்ச்சி அரசியல் கோசங்களை பாவித்து வருகின்றனர்.

கல்முனையை பாதுகாக்க வேண்டுமாயின் கடந்த காலங்களில் எமது நலனுக்காக ஒலித்த தேசிய காங்கிரஸின் குரலையும் அதன் தலைமையின் கரத்தையும் பலப்படுத்துவதோடு இங்கே நிறுத்தப்பட்டுள்ள கல்முனைத் தொகுதிக்குரிய வேட்பாளர்களான எங்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் பிரதேச மக்கள் தேசிய நீரோட்டத்தில் பயணிக்கும் தேசிய காங்கிரஸின் தலைமையை பலப்படுத்துவதன் ஊடாகவே
கல்முனையில் அரசியல் பிழைப்புக்காக விரிசல்படுத்தப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் உறவு, ஏனைய பிரதேசங்களுக்கு இடையிலான உறவு, அபிவிருத்திசார் அரசியல் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்க்க முடியும்.

கடந்த 2015 பொது தேர்தல் காலத்தில் ஹென்றி மகேந்திரன் என்கின்ற ஒருவரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் இன்று ஞானசார - கருணா போன்றோரின் புகைப்படங்களை தமது முகநூலிலும் சுவரொட்டிகளிலும் பாவித்து முகவரிகள் கூட இல்லாத அமைப்புகளை காட்டி வாக்குப் பிச்சை
கேட்கும் அளவுக்கு அவர்களது நிலைமை சென்றிருக்கிறது என்பதுதான் உண்மை.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவரது ஆசனத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கண்டி மாவட்ட சிங்கள தமிழ் மக்களிடம் நல்லவன் என்ற முகமூடியுடன் வாக்குகளை கோருகின்றார். அங்கு இதுவரை ஒரு சுவரொட்டியில் கூட ஒரு பிரச்சார மேடையில் கூட மறைந்த மாபெரும் தலைவரை அவர் கண்ணியப்படுத்தியதாக ஒரு இடமேனும் காணவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு வரும்போது முஸ்லிம் காங்கிரஸ் தொப்பியும் சால்வையும் அணிந்து கொண்டு மறைந்த தலைவரின் புகைப்படத்தை இங்கு
பாவித்து மக்களின் உச்சபட்ச அதிகாரமான வாக்குரிமையை கபடத்தனமாக அபகரித்து இனங்களுக்கிடையில் சூடேற்றி, பிரதேசங்களில் சூடேற்றி, குறிப்பிட்ட பிரதேசங்களில் இருக்கின்ற அரசியல் ஆளுமைகள் பிரித்தாண்டு தனது இருப்பையும் தலைமையையும் பாதுகாக்கின்ற கைங்கரியத்தை இன்று நேற்றல்ல அவர் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றதலிருந்து தொடர்ந் தேர்ச்சியாக செய்து வருகின்றார். இதனை மக்கள்
புரிந்தும் தொடர்ந்து கிழக்கு மண் ஏமாற்றப்படுவது மிக வருத்தம் அளிக்கின்ற ஒரு விடயமாகும்.

எமது உரிமைகளை வெல்வதாயின் தேசிய காங்கிரஸிற்கு வாக்களித்து இந்த அம்பாறை மாவட்ட மக்களை பாதுகாப்பதோடு கல்முனையை ஹரீஸிடமிருந்தும் முழு முஸ்லிங்களையும் ஹக்கீமிடமிருந்தும் பாதுகாக்க கலிமா சொன்ன முஸ்லிங்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts