(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பிராந்திய சுகார சேவைகள்பணிப்பாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரைக்குமானபிரதேசங்களில் கொரோண தொற்று நோய் பற்றிய தற்போதைய நிலை தொடர்பில் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் சுகுணன் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர,
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கட்டார்நாட்டிலிருந்து வருகைதந்த நபர் ஒருவருக்கு கொரோணா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து அங்கு 62 பேர் பொலநறுவை தமின பிரதேசத்திற்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இன்று(13) கொரோணா தொற்று அடையாளம் காணப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு வைத்தவர்கள் என்பதால் மேலும் 16 பேரை அடையாளம் கண்டுள்ளோம். இவர்களையும் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒலுவில் கடற்படை முகாமில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை புணானை தனிமைப்படுத்தல்முகாமில் பணியாற்றி கடமையை முடித்து விட்டு வந்த 06 இராணுவ சிப்பாய்கள் கடந்த இரண்டுவாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் இன்னிலையில் இவர்களில் ஒருவர் சுகயீனமுற்றதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளோம். கொரோணா தொற்று தொடர்பான பரிசோதனைக்கும் இரத்த மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனினும் இதுவரை(இன்று(13) பி.ப.2.00மணி) எந்த முடிவுகளும் வரவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் சுகாதாரஅமைச்சோடு இணைந்து கொரோணா வைரஸ் நோயை தடுப்பதற்கான முழுப்பணியையும் கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்து வருகின்றது. எதனையும் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக உண்மைகளை சொல்ல வேண்டும். அப்போதுதான் மக்களும் தமது பாதுகாப்பையும் விழிப்புணர்வுகளையும் பெற்றுக்கொள்வார்கள். தனிமைப்படுத்துவதில் அலட்சியம் செய்பவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை பொதுமக்கள் உணர்ந்து சுகாதார தரப்பினர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.