பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-11 12:34:22

அரசின் கோரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டியது இலங்கையரான நமது பொறுப்பாகும்   இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியம் வேண்டுகோள்.

(ஹுதா உமர்)

உலகம் இக்கட்டான சூழ்நிலையில் தவித்துக்கொண்டும், உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகொண்ட வல்லரசு நாடுகள் கூட செய்வதறியது தவித்துக்கொண்டிருக்கும் போது சிறியளவிலான நாடான நமது நாடு அந்த கோரானா எனும் அரக்கனை மட்டுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. இந்த மாபெரும் சமூகப்பணியை கடுமையான இன்னல்களை கடந்து எமது நாட்டின் அரசாங்க இயந்திரங்கள் செய்துகொண்டிருக்கிறது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டியது இலங்கையரான நமது பொறுப்பாகும் என இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியம் சார்பில் அவ்வொன்றிய பொதுச்செயலாளர் அ.கபூர் அன்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும்,

வைத்தியர்கள், தாதிகள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பலரும் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கோரானாவுடன் நேரடியாகவே களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் வலிமையை நாம் மதித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கத்தினால் அரைமணிக்கொரு உயிர் பிரிவதை நாம் நன்றாக அறிவோம். அவ்வாறு எமது நாட்டிலும் ஒரு நிலை உருவாகாமல் தடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டங்களுக்கும் நாட்டின் நாளைய தலைவர்களான  இன்றைய இளைஞர்களான நாம் நமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தனது குடும்பம், ஆசாபாசங்கள், பசி,பட்டினி என்பவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எமது நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளுக்கும், சுகாதார துறை ஊழியர்களுக்கும் நாட்டின் சட்டத்தை நிலைநாட்ட சகல இளைஞர், யுவதிகளும் மட்டுமின்றி இந்த நாட்டின் பிரஜைகளான சகலரும் ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இளைஞர்களாகிய நீங்கள் ஊடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நேரங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் காரியங்களில் ஈடுபடுவதை தவித்து கொள்வதுடன் பாதுகாப்பாக வீட்டில் இருந்து கோரோனா தொற்றுக்கு எதிராக உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். ஊடங்கு உத்தரவு தளர்த்தப்படும் நேரங்களில் வீணான செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து நாட்டின் ஒழுங்கான குடிமக்கள் எனும் கௌரவத்தை பேணி பாதுகாப்போம் என அவ்வறிக்கையில் கேட்டு கொண்டுள்ளனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts