(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு பெரு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. றூபி (சிவப்பு), எமரோல்ட் (பச்சை), சபையர் (நீலம்) ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாடசாலையில் எட்டு ஆண்டுகளின் பின்னர் இந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறுவதையிட்டு பலரும் தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
திறந்த போட்டியாக நடைபெற்ற மாபெரும் சைக்கில் ஓட்டம் இன்று (01) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஜெ. ஹஸீப் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியை பாடசாலையின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாவட்ட நீதவானுமாகிய எம்.சி. றிஸ்வான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மருதமுனை பிரதான வீதியில் பாடசாலையின் நுளை வாயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சைக்கில் ஓட்டம் கல்முனை, காரைதீவு, நிந்தவூர் பிரதன வீதி ஊடாக அக்கரைப்பற்று நகரத்திற்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. பழைய மாணவர்களின் 'ரைட்ஸ் ஹப்' காலை சைக்கிள் ஓட்ட அணி இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான ஏ.எம். லத்தீப், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட பாடசாலையின் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.